நாவலர் பெருமான் சைவநெறி தழைத்தோங்கவும், தமிழ் மொழி செழித்து வளரவும் பெரும் பணியாற்றியவராவார். அவர் யாழ்ப்பாணம், நல்லூர் கந்தப்பிள்ளை, சிவகாமி அம்மையார் ஆகிய இருவருக்கும் புதல்வனாக 1822ம் ஆண்டு அவதரித்தார். இலங்கையும், இந்தியாவும் அந்நியர் ஆட்சியின் கீழ் இருந்த போது சைவமும், தமிழும் பெரும் ஆபத்துக்களை எதிர்நோக்கிய காலப் பகுதியிலே தோன்றியவர் தான் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர். பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் ஆறுமுகம்.வரலாற்றுக்கு முற்பட்ட சமயமாகவும், ஈழம் வாழ் மக்களின் பெரும்பாலானோரது உள்ளத்துள் ஒளி விளக்காய் சுடர்விட்டிலங்குவதுமான சைவ சமயம் அந்நியரது செல்வாக்கு வலிவுற்றிருந்த காலத்தில் சிறிது நலிவுற்றிருந்தது. இலங்கைக்கு வர்த்தக நோக்கோடு வந்த அந்நிய ஆட்சியாளர் அரசியலாதிக்கத்தைக் கைப்பற்றவும் தற்சமயம் கொள்கையை பரப்பவும் எண்ணங்கொண்டு கல்வி வழிப்பிரசாரம் செய்யத் தலைப்பட்டனர். அந்நியவெற்று நாகரீகப் போக்கில் ஈடுபாடு கொண்ட மக்கள் சுயமசய கலாசார வழிகளை மறந்து வாழ்வாராயினர்.